அமெரிக்காவில் 150 நாட்களில் 30 கோடி கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஜனவரி- 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக தான் பொறுப்பேற்றதில் இருந்து 150 நாட்களுக்குள் இந்த இலக்கை அடைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலங்கை நோக்கி ஜனாதிபதி பைடன் நகர்ந்து வருகிறார். ஜூலை -04ஆம் திகதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் 70 வீதமானவர்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போடுவதற்கு அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
150 நாட்களுக்கு முன் அமெரிக்கா பெரும் நெருக்கடியில் இருந்தது. அமெரிக்கர்கள் அனைவருக்கும் போதிய தடுப்பூசி கிடைக்கவில்லை. ஆனால், நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுள்ளோம் எனவும் பைடன் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, நேற்று வரையான தரவுகளின் பிரகாரம் 18 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் 65 வீதமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா