டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது கொரோனா தொற்று பரவல் ஆபத்தை அதிகரிக்கும் என ஜப்பானிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒலிப்பிக் போட்டிகளைக் காண அதிகளவு பார்வையாளர்கள் ஒன்றுகூடுவது மற்றும் அவா்களின் அதிக நடமாட்டங்களால் தொற்று நோய் தீவிரமாகி நாட்டின் சுகாதார கட்டமைப்புக்கு பெரும் சுமையாகஅமையலாம் என ஜப்பானிய சிரேஷ்ட சுகாதார ஆலோசகர் ஷிகெரு ஓமி தலைமையிலான ஜப்பானிய மருத்துவ நிபுணர்கள் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டுக்களை நடத்துவதே ஆபத்துக்களைக் குறைக்கும். அதுவே விரும்பத்தக்கது என அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் வெளிநாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிகளைக் காண உள்ளூா் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என ஜப்பானின் பிற அதிகாரிகள் கோரியுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த வருடம் நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று நோய் ஆபத்தை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 23ஆம் திகதி முதல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பார்வையாளர்களை அனுமதிக்கும் முறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த இறுதி முடிவு திங்கட்கிழமை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஒலிப்பிக் போட்டி்களின்போது பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்று வருகின்றனர். இதற்காக 40,000 பேருக்கு போதுமான பைசர் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய மாதங்களில் ஜப்பானில் கோவிட் -19 புதிய அலைகள் பரவி வருகின்றபோதும் ஒலிப்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.