"நாடு நெருக்கடியான காலத்தில் இருக்கும்போது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதன் மூலமாகவோ அல்லது அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதன் மூலமாகவோ நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. மக்களின் பிரச்சினைகளை விடவும் அரசைக் கவிழ்க்கவே எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது." - இவ்வாறு அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இவை அனைத்துமே நாம் திட்டமிட்டு செய்யும் செயற்பாடுகள் அல்ல. உலகத்தில் சகல நாடுகளும் இந்த நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளும் கூட பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகவே, இதற்கு அரசாக நாம் பொறுப்புக்கூற முடியாது.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சர் உதய கம்மன்பில தனது பக்க நியாயத்தை முன்வைத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், மத்திய வங்கி, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு ஆகிய சகலவற்றிலும் ஆராய்ந்தே எரிபொருள் விலை அதிகரிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது நியாயமானதாக நாம் கருதவில்லை.
நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து அரசை வீழ்த்துவது என்றால் அது நியாயமற்ற செயற்பாடு என்றே நான் கருதுகின்றேன்" - என்றார்.