"இலங்கையில் இந்தியாவின் கொடிய திரிபு வைரஸான 'டெல்டா' பரவ ஆரம்பித்தால் அச்சுறுத்தல் அதிகமாகும். சுகாதாரத் தரப்பினால் தாங்கிக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்." - இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"பயணக் கட்டுப்பாட்டை மாத்திரம் பிறப்பித்து, சட்டத்தால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னரும் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மோசமடையும்.
'டெல்டா' வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை. அதுமட்டுமல்ல வேறு பகுதிகளுக்கு 'டெல்டா' வைரஸ் பரவியுள்ளதாகக் கண்டறியப்படவில்லை.
சகல விதத்திலும் சுகாதாரத்துறை மாத்திரம் நிலைமைகளைக் கையாள முடியாது. எனவே, மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை 'டெல்டா' வைரஸ் தொற்று இங்கு பரவ ஆரம்பித்தால் விளைவுகள் மோசமாகும். இந்தியாவின் நிலைமைகளைக் கருத்தில்கொண்டு எப்போதுமே நாம் செயற்பட்டாக வேண்டும்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கூட சுகாதாரக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும். மக்கள் அவற்றை நிராகரிக்க முடியாது. சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றினால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை