வேகமாகக் பரவக்கூடிய ஆபத்தான வகை டெல்டா வைரஸ் காரணமாக பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக தடுப்பூசி திட்டம் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவினர் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு (JCVI) ஆலோசகர் பேராசிரியர் ஆடம் ஃபின் நேற்று சனிக்கிழமை .இவ்வாறான எச்சரிக்கையை விடுத்தார்.
டெல்டா வைரஸ் தொடர்ந்து நாட்டில் பரவி வருகிறது. இதனால் தொற்று நோயின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்டுள்ளது எனவும் பேராசிரியர் ஃபின் கூறினார்.
இரண்டாம் அலையைக் காட்டிலும் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலையின் வீரியம் அதிகமாக இருப்பதால் பிரிட்டன் சுகாதாரத் துறை மிக கவனமாக இதனைக் கையாள வேண்டும் என அவா் அறிவுறுத்தினார்.
வயோதிபர்களுக்கு விரைவில் இரண்டு தடப்பூசிகளையும் செலுத்துவதன் மூலமாக இறப்புக்களைக் கட்டுப்படுத்தி முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் என்றும் அவா் தெரிவித்தார்.
தடுப்பூசி பணியை இன்னும் துரிதப்படுத்துவதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் இருந்து 80 வீதமானவர்களை மீட்க முடியும்.
முதல் தடுப்பூசியால் வைரஸ் தொற்று அபாயம் 75% குறைகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதே சமயத்தில் சரியான கால இடைவெளியில் இரண்டாவது தடுப்பு மருந்தை செலுத்தினால் வைரஸ் தொற்று அபாயம் 90 வீதம் குறைகிறது எனவும் பேராசிரியர் ஆடம் ஃபின் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து