Friday 29th of March 2024 10:17:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
“எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றேன்” - ஜனாதிபதி விசேட உரை (முழுமை இணைப்பு)

“எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றேன்” - ஜனாதிபதி விசேட உரை (முழுமை இணைப்பு)


நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்து நாட்டை விடுவித்து, மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துக்காக நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன் என நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8.30 மணிக்கு ஊடகங்கள் வாயிலாக ஆற்றிய உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிலர் தமது தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, அரசாங்கத்துடன் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்ற கருத்தை மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், எனக்குத் தேவையான சிலரை மகிழ்விப்பதற்காக, எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது. நான் உறுதியளித்த வகையில், ’சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் கூறினார்.

உங்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராகஇருக்கிறேன். நான் எனது பொறுப்புகளைக் தட்டிக்கழிக்காது நிறைவேற்றுவேன். நாட்டை நேசிக்கின்ற எதிர்காலத் தலைமுறைக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாரான அறிவார்ந்த மக்கள், எனக்கும் எனது அரசாங்கத்துக்கும் எமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன் எனவும் தனது உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவரது உரையின் முழு விபரம் வருமாறு,

எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்துநாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்த நாடுகள், தற்போது அதன் பாதிப்பைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளன. அந்நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெருமளவானோருக்குத் தடுப்பூசி ஏற்றியதனாலேயே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சில நாடுகளால் அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்பட்டாலும், இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் தமது மக்களுக்காகப் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகளும் உள்ளன.

இலங்கைக்குத் தடுப்பூசியைக் கொண்டுவருவது தொடர்பில், கடந்த காலத்தில் நான் விஷேட கவனம் செலுத்தியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன், தனிப்பட்ட முறையில் உரையாடினேன். கடிதத் தொடர்புகள் மூலமும், கோரிக்கை விடுத்திருந்தேன். எமது வெளிநாட்டு அமைச்சின் ஊடாகவும் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடினோம். எமது அதிகாரிகள், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே, இம்முயற்சிகளின் நோக்கமாகும்.

இந்த முயற்சிகளின் பயனாக, ஓவ்வொரு மாதமும் எமக்குத் தேவையான பெருமளவு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். தற்போது வரையில், 12 இலட்சத்து 64, ஆயிரம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள், 31 இலட்சம் சைனோ;ஃ.பாம் தடுப்பூசிகள்,ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் உள்ளடங்களாக, 44 இலட்சத்து 94 ஆயிரம் தடுப்பூசிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன. தற்போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் மொத்தச் சனத்தொகையில், சுமார் 3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசிகள்ஏற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில், 4 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 25 இலட்சம் சைனோவெக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. அதேபோன்று, 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஓகஸ்ட் மாதமளவில் 5 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 25 மில்லியன் சைனோவெக் தடுப்பூசிகளும், 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் 3 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 இலட்சம் மக்களுக்கான தடூப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும்.

இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய பெரும் எதிர்பார்ப்புடனேயே, 2019ஆம் ஆண்டூ நவம்பர் மாதம், மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். எத்தகைய பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும், அந்த எதிர்பார்புகளை நிறைவேற்றுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப்பட மாட்டாது எனக் கருதப்பட்ட புலி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று நாம் பொறுப்பேற்றதைப் போன்று, நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்து நாட்டை விடுவித்து, மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துக்காக, நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்.

நான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றேன். எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, நாம் கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. அத்துடன், தற்காலத்தைப் பற்றியும் மிகச்சரியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்வது முக்கியமானதாகும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதே, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.அன்று இந்த நாட்டு மக்கள், மத அடிப்படைவாதம் குறித்து பெரும் அச்சம் கொண்டிருந்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன், எமது நாட்டின் பாதுகாப்புப் பொறிமுறை, பெரிதும் பலவீனப்பட்டிருப்பதை மக்கள் விளங்கிக்கொண்டனர்.

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்கள் காரணமாக, எமது புலனாய்வுத்துறை மிகவும் பலவீனப்பட்டிருந்தது. எமது பாதுகாப்புத்துறை, சர்வதேச மட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது. எமது புனிதஸ்தலங்கள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டிருந்தன. தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பகிரங்கமாக அழிவுக்கு உள்ளாக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டில் முடித்து வைக்கப்பட்ட பயங்கரவாதம், மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் மீண்டும் உருவாகியிருந்தது. தேசிய பாதுகாப்பு தொடர்பில், நாம் தற்போது பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். பொறுப்புக் கூறவேண்டிய பதவிகளுக்கு, பொருத்தமான அதிகாரிகளை நியமித்துள்ளோம். பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பாதுகாப்புத் துறையினரின் மனநிலையை, நாம் மீண்டும் பலப்படுத்தியுள்ளோம். அன்று பலவீனப்பட்டிருந்த புலனாய்வுத் துறையை, மீண்டும் ஒழுங்கமைத்தோம். கடந்த ஆட்சிக் காலத்தில் மறக்கடிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் திட்டங்களை, மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.நாட்டுக்குப் பெரும் சவாலாக மாறியிருந்த பாதாள உலகக் கோஷ்டிகளை, வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளோம்.

போதைப்பொருள் பிரச்சினையை ஒரே தடவையில் தீர்ப்பது கடினம் என்றபோதும், அதனைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளோம். முழுமையாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது பாரம்பரியம், எமது கலாசாரம், தேசியம் என்பவற்றைப் பற்றி கதைப்பது இழிவாக கருதப்பட்டு வந்த யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கிறோம். அனைத்து இனத்தவர்களும் அனைத்து மதத்தவர்களும், தமது தனித்துவங்களைப் பாதுகாத்து, அடுத்தவருக்குப் பாதிப்பின்றி, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான அமைதியான சூழலை, இந்தக் குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பியுள்ளோம். இன்று இந்த நாட்டின் ஒருமைப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதேபோன்று, எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு, இந்த அரசாங்கம் எவருக்கும் இடமளிக்க மாட்டாது. தேசிய பாதுகாப்பை எனது அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே, எமது மற்றமொரு முக்கிய சவாலாக இருந்தது. இதற்கான சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருக்கிறோம். கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில், நாம் முகங்கொடுத்த முக்கிய சவால்கள், அவற்றை நாம் எதிர்கொண்ட விதம் பற்றி மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டில் உருவான புதிய அரசாங்கத்திடம் இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கையளிக்கும் போது, எம்மிடம் பலமானதொரு பொருளாதாரம் இருந்தது.

சுமார் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன். ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் நாம் இருந்தோம். நாட்டுக்குப் பெருமளவு வெளிநாட்டூ முதலீடுகள் கொண்டுவரப்பட்டன. ரூபாயின் பெறுமதி ஸ்திரமான நிலையில் இருந்தது. வெளிநாட்டு இருப்பு பலமானதாக இருந்தது. கடன்சுமை தளர்த்தப்பட்டு இருந்ததுடன், முழு நாடுமே ஒரு தொழில் நிலையமாக மாறி, துரித அபிவிருத்திகள் கண்டுவந்தன.

கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், இந்த நாட்டில் எந்தவோர் இயற்கை அனர்த்தமும் ஏற்படவில்லை. அக்காலப்பகுதியில், கொரோனா போன்ற உலகளாவிய பிரச்சினையும் இருக்கவில்லை. என்றாலும், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக, எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 2019ஆம் ஆண்டாகும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2.1 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அரசுக் கடன் 7,400 பில்லியன் ரூபாவில் இருந்து 13,000 பில்லியன் ரூபா வரை அதிகரித்துக் காணப்பட்டது. மக்கள் மீதான வரிச்சுமை, இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. ரூபாயின் பெறுமதியில் தளம்பல் ஏற்பட்டு, பொருட்களின் விலையும் அதிகளவு அதிகரித்துக் காணப்பட்டது. ஏற்றுமதி வருமானம் குறைந்து, வெளிநாட்டு இருப்பும் பலவீனமடைந்திருந்தது.

இவ்வாறு வீழ்ச்சி கண்டிருந்த ஒரு பொருளாதாரத்துடன் தான், நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன். என்றாலும், அந்த யதார்த்தத்தை மிகச் சரியாக விளங்கிக்கொண்டு, முறையானதொரு திட்டத்துடன் தான் நாம் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்தோம். எதிர்பாராத விதமாக, எமது நாட்டில் மட்டுமன்றி, முழு உலகத்துக்குமே பிரச்சினையாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மாறியது. அதனால், அந்தத் திட்டங்களை நாம் எதிர்பார்த்த வகையில் நடைமுறைப்படுத்த முடியாததொரு சூழ்நிலை உருவானது. நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்கு முன்னர், கொவிட் 19 தொற்று சீனாவில் ஆரம்பித்து, முழு உலகிலும் பரவத் தொடங்கியது. தொற்றுப் பரவலின் தன்மையைப் புரிந்துகொண்ட உடனேயே, மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், சிறந்த நிர்வாகிகள், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஜனாதிபதிச் செயலணியை ஸ்தாபித்து, எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு நிலைமையையும் முகங்கொடுக்கத் தயாரானோம். இலங்கையில் முதலாவது கொரோனா கொத்தணி உருவான சந்தர்ப்பத்தில், உரிய நேரத்தில் நாட்டை முடக்கி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தினோம். தொற்றுக்குள்ளான அனைவருக்கும், அரசாங்கத்தின் செலவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. வைரஸ் தொற்றிய காலத்தில், அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அனைவரையும் புலனாய்வுத் துறையின் உதவியுடன் கண்டறிந்து, அவர்களையும் தனிமைப்படுத்தினோம். அந்த வகையிலேயே, முதலாவது கொரோனா அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த எம்மால் முடிந்தது. உலகில் ஏனைய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சுமார் மூன்று மாதக் காலப்பகுதியில், இலங்கையில் எந்தவொரு தொற்றாளரும் கண்டறியப்படவில்லை.

எந்தவொரு நாட்டினாலும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை நீண்டகாலம்மூடிவைக்க முடியாது. வெளிநாடுகளில் அநாதரவான நிலையில் உள்ள தமது நாட்டு மக்களை நாட்டுக்கு மீள அழைத்துவர வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை, கட்டுப்பாடுகளின் கீழேனும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் தவிர்க்க முடியாத உலகளாவிய தொடர்புகள் காரணமாக, கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டுக்குள் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த எந்தவொரு நாட்டினாலும் முடியவில்லை நாட்டை மூடிவிடுவதால், அபாய நிலையைத் தற்காலிகமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில், பெருமளவு மக்கள், கூட்டம் கூட்டமாகப் பயணங்களை மேற்கொண்டதன் விளைவாக, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது, பல வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் உருவாகி இருப்பதுடன், வேகமாகவும் அந்த வைரஸ்கள் பரவி வருவதால், முன்னைய நிலைமைகளைப் பார்க்கிலும் பாரதூரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. வைரஸ் வேகமாகப் பரவி, தொற்றாளர்களின் அளவு துரிதமாக அதிகரிக்கின்ற போது, அதற்கு விரைவாக முகங்கொடுப்பதற்கு, சுகாதாரத் துறைக்கு உள்ள மனித வளங்களும் ஏனைய வசதிகளும் போதுமானதாக இல்லை. அதனால், நாட்டை மீண்டும் முடக்கவேண்டி சூழ்நிலை, அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.

இத்தகைய தொற்றுப் பரவல் நிலைமைகளுடன் மேற்கொள்கின்ற போராட்டத்தில், உலகின் ஏனைய பல நாடுகளும் நாமும், அவ்வப்போது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்தத் தீர்மானத்தின் பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில், பல்வேறு சட்டதிட்டங்களை விதிக்கவேண்டி ஏற்பட்டது. தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்பவர்களை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டது. இந்த நிலைமை, எமது தொழிற்சாலைகளுக்குப் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, சுற்றுலாத் துறை மீதே நாம் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தோம். 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த சுற்றுலாத்துறை வருமானத்தை. 2025ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இன்று, முழு உலக நாடுகளும் சுற்றுலாத் தொழிற்றுறையில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ பல இலட்சம் தொழில்வாய்ப்புகளை நாம் இழந்திருக்கின்றோம். சுயதொழிலை மேற்கொண்டுவந்த இலட்சக்கணக்கானோரின் வருமானங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. இத்துறையுடன் தொடர்புபட்டவர்கள், இன்று பாரிய கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கடந்த சுமார் ஒன்றரை வருடக் காலப்பகுதியில் எதிர்பார்த்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளும், பெருமளவில் எமக்குக் கிடைக்கவில்லை.இவ்வாறான பல காரணங்களினாலும், நாம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த அந்நியச் செலாவணியின் அளவு, எமக்குக் கிடைக்காமல் போயுள்ளது. இத்தகையதொரு நிலைமையின் கீழ், நாம் அந்நியச் செலாவணியை மிகவும் முறையாக முகாமைத்துவம் செய்யவேண்டி இருக்கின்றது. எமது தேசிய பொருளாதாரத்தின் மற்றுமொரு முக்கியத் துறையாக விளங்குவது, சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்றுறையாகும். மொத்தத் தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிக பங்களிப்பை வழங்கும் இந்தத் துறை, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

நாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வரிகளைக் குறைத்ததன் காரணமாக, அரச வருமானங்கள் குறைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். அவ்வாறு நாம் செய்யாதிருந்திருந்தால், இந்தத் தொற்றுப் பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலைமை, இன்னும் மோசமடைந்திருக்கும். கடந்த அரசாங்கம், மக்கள் மீது பாரிய வரிச்சுமையைச் சுமதித்தியிருந்தது. 2015 2019 காலப்பகுதியில், நேரடியானதும்மறைமுகமானதுமான வரிகள் இரட்டிப்பாகக் காணப்பட்டன. நாம் அதிகாரத்துக்கு வந்தஉடனேயே, அந்தக் கஷ்டத்தில் இருந்து மக்களை விடுவித்தோம். இந்த அனைத்துத் தடைகளுக்கு மத்தியிலும், மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றிஇருக்கிறோம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு, புதிதாகப் பல செலவுகளை அரசாங்கம் சுமக்கவேண்டியதாயிற்று. தொற்று நிலைமைகள் காரணமாக நாடூ முடக்கப்பட்டிருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நாளாந்த வருமானத்தை இழந்து அனாதரவான நிலைக்கு ஆளான மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க, ஒவ்வொரு முறையும் நாம் சுமார் 30 பில்லியன் ரூபாவை செலவிட்டிருக்கிறோம். இதுவரையில் பல சந்தர்ப்பங்களில், அரசாங்கம் இந்தச் செலவை ஏற்றிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட பல மேலதிகச் செலவுகளை அரசாங்கம் ஏற்றிருக்கின்றது. பிசிஆர், அன்டிஜன் பரிசோதனைகளுக்காகவும் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையங்களைப் புதிதாக உருவாக்குவதற்காகவும், அரசாங்கம் மேலதிகச் செலவுகளை ஏற்றிருக்கின்றது. அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான செலவுகளுக்கு மேலதிகமாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும், இரண்டு வாரங்களுக்குச் சுமார் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்சினை உருவான காலம் முதல் இதுவரையில், 260 பில்லியன் ரூபா க்கும் அதிகமான தொகையை, மக்கள் நிவாரணங்களுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளது.

திட்டமிடப்பட்டிருந்த நிவாரணங்களுடன் கொரோனா செலவுகளும் சேர்ந்துகொள்கின்ற போது, அது கடந்த வருடம் நாட்டின் மொத்த அரச வருமானமான 1,380 பில்லியன் ரூபாவி ன் அரைவாசியாகக் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும், அரசாங்கம் ஒருபோதும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கோ கொடுப்பனவுகளை நீக்குவதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை. எமது அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதும், அரசாங்கத்தினால் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்குச் செலுத்தவேண்டியிருந்த கடன் தவணைகளைச் செலுத்தத் தவறியதில்லை. கடந்த காலத்தில், பல்வேறு அரசாங்கங்களினால் எடுக்கப்பட்டிருந்த கடன் காரணமாக, நாம் வருடம் ஒன்றுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற பாரிய கடன் தவணையைச் செலுத்த வேண்டியிருந்தது. அரசாங்கத்தினால் இந்தக் கடனைச் செலுத்த முடியாது போகும் என்ற ஒரு கருத்தை, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி கொண்டு சென்றது. இருப்பினும், நாம் நாட்டை அபகீர்த்திக்கு உட்படுத்தாது, அந்த அனைத்துக் கடன் தவணைகளையும் உரிய காலத்தில் செலுத்தியிருக்கிறோம். இந்த நிலைமையின் கீழ், அந்நியச் செலாவணி பிரச்சினையைத் தவிர்ப்பது, அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதன் காரணமாக, ஓர் அரசாங்கம் என்ற வகையில், நாம் சில முக்கியத் தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. சில அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் குறிப்பாக ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் தீர்மானித்தோம். இவ்வாறான தடைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கவில்லை.

நாட்டை நேசிக்கின்ற, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கின்ற அறிவார்ந்த மக்கள், இந்தத் தற்காலத் தேவையை விளங்கி, இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு, எம்முடன் ஒத்துழைப்பார்கள் என்று நாம்எதிர்பார்க்கின்றோம். நாம் முன்னெடுக்கின்றன அபிவிருத்திப் பணிகள், உரிய முறையில் மக்களிடம் சென்றடையவில்லை என்பது, எமது அரசாங்கத்தின் குறைபாடாக இருந்துவருகிறது. இதன் விளைவு, ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் பிரச்சினைகளை மாத்திரமே மக்கள் பார்த்தனர். சமூக ஊடகங்களின் வாயிலாகப் பேசப்படுகின்ற சில பிரச்சினைக்குரிய விடயங்களை மட்டூமே தெரிந்துகொண்டார்கள். இதனால், கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்ளால், நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த பயன்கள் பற்றி எவரும் பேசவில்லை.

தனிநபர் அடையாளங்களை ஊதிப் பெருப்பிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற பிரசார நடவடிக்கைகளைச் செய்யாத போதும், ஒர் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் பற்றி மக்கள் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின், மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை அரசியல் தேவைகளுக்காகக் கொண்டுசெல்லும் எதிர்த் தரப்பினருக்கு, அது சாதகமாக அமைந்துவிடும். இதன் பெறுபேறாக, இன்று உண்மை மறைக்கப்பட்டு பொய் வெற்றிகண்டுள்ளது.

. இலங்கையில் பயிர்ச் செய்ய முடியுமான விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அல்லது மீள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்ததன் மூலம், மிளகு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பு உருவாகி இருக்கிறது. எத்தனோல் இறக்குமதியை முற்றாகத் தடை செய்த காரணத்தால், எமது சீனித் தொழிற்சாலைகள் இன்று இலாபமீட்டும் நிலையை அடைந்துள்ளன.

விவசாயத்துக்கு உரிய கௌரவத்தை வழங்கியதன் காரணமாக, முன்பு விவசாயத் துறையில் அக்கறை காட்டாத பலர், இன்று பல்வேறு மட்டங்களில் விவசாயத் திட்டங்களுக்கு மாறியிருக்கிறார்கள்.நாட்டில் இரசாயன உர இறக்குமதியை முற்றாகத் தடை செய்வது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம், இதில் ஒரு முக்கிய தீர்மானமாகும்.

இலங்கையின் நிலப்பகுதியுடன் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 289 ஹெக்டயார் நிலப்பரப்பைக் கொண்ட கொழும்புத் துறைமுக நகரத்துக்கு, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளது. துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அதற்காக நூறு சதவீதம் இலங்கையர்களைக் கொண்ட ஓர் ஆணைக்குழுவை நியமித்துள்ளோம்.

நாம் கட்டியெழுப்ப எதிர்பார்க்கின்ற நிதி நகரத்தின் முதலாவது முதலீடாக, 400 மில்லியன் டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்படும் 2 கோபுரங்களுடன் கூடிய வர்த்தகக் கட்டிடங்களுக்கு, அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற நிதிக் குழு அனுமதி வழங்கியுள்ளது

சில நாள்களுக்கு முன்னர், இலங்கையில் முதலீட்டூ வாய்ப்புகள் தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை நாம் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தினோம். இதன்போது, பெருமளவான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம், எமது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முதலீடுகளைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புகள் குறித்த சாதகமான செய்தியை எமக்குத் தந்திருக்கிறது. இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய வெற்றியை, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் நாமும் அடைந்துகொள்ள முடியுமானால், அது எமது நாட்டின் வெளிநாட்டு இருப்பைப் பலப்படுத்துவதற்கு பெரும் உதவியாக அமையும். இதனூடாக,நே ரடியாகவும் மறைமுகமாகவும் பல நன்மைகளை, எமது நாட்டு மக்கள் எதிர்பார்க்க முடியும். இந்த முதலீடுகளுக்கு, இலங்கையின் பங்குச் சந்தையில் இடம்பெறக்கூடிய வாய்ப்பை வழங்குவதன் ஊடாக, எமது நாட்டின் சாதாரண மக்களுக்கும் இந்தத் திட்டங்களில் பங்குதாரர்களாககும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம் அரச நிர்வாகத்தில், நாம் சட்டத்தின் ஆட்சியை எப்போதும் மதித்து வந்திருக்கிறோம். அரச ஊழியர்கள் அச்சமின்றி தமது கடமைகளை நிறைவேற்ற முடியும். நான் ஆட்சிக்கு வந்த பின்னர், எந்தவொரு நியமனமும் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படவில்லை. தகைமை அடிப்படையிலேயே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம், சட்ட மா அதிபர் நியமனம் போன்ற நியமனங்களின் போது, இந்தக் கொள்கை மிக உயர்ந்த மட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளைச் சரி செய்துகொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்தின் அடிப்படையில், உறுதியாகச் செயற்படுகின்ற போது மட்டுமே, நாம் சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும். இலங்கை வரலாற்றை எழுதுகின்ற போது, நாம் கடந்து சென்றுகொண்டிருக்கின்ற இக்காலப்பகுதி, எவ்வளவு கஷ்டமானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். என்றாலும், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும், நாம் வெற்றியோடு முன்னோக்கிச் செல்ல போகின்றோமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது. நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்த சந்தர்ப்பத்தில், நாட்டை முன்னிறுத்திய ஒரு தலைமையையே, எனக்கு ஆதரவளித்த பெருமளவானவர்கள் கோரினர். தனிப்பட்ட கோரிக்கைகள் எவையும், அவர்கள் என்னிடம் முன்வைக்கவில்லை. இருப்பினும், நான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிலர் தமது தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, அரசாங்கத்துடன் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்ற கருத்தை மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினுத், எனக்குத் தேவையான சிலரை மகிழ்விப்பதற்காக, எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது. நான் உறுதியளித்த வகையில், ’சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எனது எதிர்பார்ப்பாகும். அன்று போலவே இன்றும் உங்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராகஇருக்கிறேன். நான் எனது பொறுப்புகளைக் தட்டிக்கழிக்காது நிறைவேற்றுவேன். நாட்டை நேசிக்கின்ற எதிர்காலத் தலைமுறைக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாரான அறிவார்ந்த மக்கள், எனக்கும் எனது அரசாங்கத்துக்கும் எமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகத் தொடர்ந்தும் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE