கோவிட் 19 சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி, பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த விவகாரம் பெரும் சா்ச்சையாக உருவெடுத்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கான தடை தொடர்ந்து அமுலில் உள்ளது.
இந்நிலையில் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தக் காட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவான நிலையில் அந்த நாட்டின் பிரபல பத்திரிகையான தி சன் இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜோன்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.
இதையடுத்து மாட் ஹான்கொக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும் இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாட் ஹான்கொக் நேற்று தெரிவித்தார்.
தனது ராஜனாமா கடிதத்தை அவர் நேற்று பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பினார். "இந்த தொற்றுநோய்களில் இவ்வளவு தியாகங்களை செய்ய பொதுமக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களை அறிவுறுத்தும் நாங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் மாட் ஹான்கொக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஹான்கொக் ராஜினாமா கடிதத்தை வருத்தத்துடன் பெற்றுக்கொண்டதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
மாட் ஹான்கொக் ராஜினாாவை அடுத்து சஜித் ஜாவித் புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலம் அறிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து