இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி 3வது ரீ-20 போட்டியிலும் படுதோல்வியைச் சந்தித்து தொடரை 0:3 என்ற கணக்கில் பறிகொடுத்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட ரீ-20 தொடரின் முதலிரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது இலங்கை அணி.
இந்த போட்டியிலும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக டேவிட் மாலன் 76 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.
பந்து வீச்சில் சமீர 4 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.
181 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.
இங்கிலாந்து வீரர்களின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது இலங்கை அணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
அதிகபட்சமாக பினுர பெர்னாண்டோ-20, ஒசாத பெர்னாண்டோ-19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தன்.
இலங்கை அணியின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர்.
பந்து வீச்சில் டேவிட் வில்லி 3 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இதையடுத்து தொடரையும் 3:0 என் கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்தது இங்கிலாந்து அணி.
போட்டியின் ஆட்ட நாயகனாக டேவிட் மாலனும், தொடர் நாயகனாக சாம் கர்ரனும் தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை