பிற நாடுகளை சீனா ஒருபோதும் ஒடுக்கவில்லை. அதே நேரம் யாரும் சீனாவை அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என சீன ஜனாதிபதியும்,சீனகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என்றும் அவர் எச்சரித்தார். இதன் மூலம் அமெரிக்காவை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் கூடியிருந்த சுமார் 70 ஆயிரம் பேர் முன்னிலையில் பேசும்போதே ஜி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா தனது ஆயுதப் படைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும். நமது தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான அதிக திறன் மற்றும் நம்பகமான வழிமுறைகள் எம்மிடம் உள்ளன.
எந்தவொரு வெளிநாட்டு சக்திகளும் எங்களை கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ, அடிபணிய வைக்கவோ சீனா மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் ஜி ஜின்பிங் கூறினார்.
பிற கலாச்சாரங்கள், பிற சாதனைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள சீனா ஆர்வமாக உள்ளது. உலகின் பயனுள்ள பரிந்துரைகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்கிறோம். ஆனால் சீனர்களை ஒடுக்கும் வகையிலான உலகின் பிரச்சாரங்களை சீனா ஒருபோதும் ஏற்காது எனவும் அவா் தெரிவித்தார்.