சீனாவின் கிழக்கு - ஜியாங்ஸு மாகாணத்தின் ஷூஸு நகரில் விடுதிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானதுடன், ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
36 மணி தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 23 பேரில் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க முற்பட்ட உரிமையாளரின் திட்டத்தால் அது பலவீனம் அடைந்து இடிந்து விழுந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூன்று மாடிகள் கொண்டதாக இருந்த இக்கட்டத்தின் மேல் தளம் ஒவ்வொன்றாக கூட்டப்பட்டதாக அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜியாங்ஸு மாகாண அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஷுஸுவில் உள்ள சிஜி கையுவான் என்ற இந்த விடுதிக் கட்டடம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப்பணியில் 600க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். 54 அறைகள் கொண்ட விடுதியில் 18 பேர் இருந்ததாக பதிவுகள் உள்ளபோதும் பதிவின்றி மேலும் பலர் அதில் தங்கியிருந்தது பின்னர் தெரியவந்தது.
சீனாவின் புஜியான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இதேபோன்று விடுதி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.