தென்னாப்பிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்றுவரும் போராட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறைகளால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
சொவேட்டோ நகரில் கடைகள் சூறையப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் முக்கியப் பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையைத் தூண்டிய சுமார் 1,234 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1990-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் மிக மோசமான வன்முறை இதுவென அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ராமபோஸா கூறியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வன்முறையாளர்கள் வணிக வளாகங்கள், கடைகளைச் சூறையாடி வருவதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படும் என அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கால நிலையை அறிவிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது.