ஜேர்மனியின் மேற்கு கரை ரைன்லாண்ட்-பலாட்டினாட்ட (Rhineland-Palatinate) மாகாணத்தில் நேற்று புதன்கிழமை இரவு முதல் பெய்துவரும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளனர். பலர் வீட்டுக் கூரைகளில் ஏறி சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைத் தேடி மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக கோப்லென்ஸ் பகுதி பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அதன் பின்னரே வெளியிடப்படும் எனவும் அவா் கூறினார்.
தென்மேற்கு ஜெர்மனியில் நாளை வெள்ளிக்கிழமை மாலை வரை பலத்த மழை பெய்யக்கூடும் என ஜெர்மன் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.