கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பான மூல தரவுகளை சீனா கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தோற்றம் குறித்த தரவுகள் இல்லாததால் அது குறித்த விசாரணைகள் தடைப்பட்டு வருவதாக கூறினார்.
உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் குழுவொன்று சீன நிபுணர்களுடன் இணைந்து கடந்த மார்ச் மாதம் கொரோனாவின் தோற்றம் குறித்து சீனாவின் வுஹான் நகரில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வறிக்கையில் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவியதற்கான ஆதாரங்களைக் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், வௌவால்களில் இருந்து வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவின் தோற்றம் குறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் எனவும் நிபுணர் குழுவினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணைக்கு வெளிப்படையாக ஒத்துழைப்பு வழங்குமாறு சீனாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயத்தில் உண்மையைக் கண்டறிவது பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த மில்லியன் கணக்கானவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று வியாழக்கிழமை டெட்ரோஸுடன் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், கோவிட் -19 தொற்றுநோயின் தோற்றம் குறித்து விசாரணைகளைத் தொடர ஒத்துழைக்குமாறு சீனாவை வலியுறுத்தினார். இந்த விசாரணைக்கு மேலும் தகவல்கள் தேவை என்று அவர் கூறினார்.
அத்துடன், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க உதவும் வகையில் உலக சுகாதார அமைப்புக்கு 260 மில்லியன் யூரோ (307 மில்லியன் டொலர்) நன்கொடையை அவா் அறிவித்தார்.