இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆபத்து குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் அடுத்து வரும் 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த தினசரி கொரோனா தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது ஒரு எச்சரிக்கை அறிகுறி என கொரோனா நிலவரம் தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.போல் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
இந்தியாவில் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களிடையே மரண வீதம் கிட்டத்தட்ட 95% குறைந்துள்ளதாக அவா் கூறினார். ஒரு தடுப்பூசி இறப்பு அபாயத்தை 82% குறைத்துள்ளதாகவும் வி.கே.போல் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தடுப்பூசி போடும் செயற்பாடுகள் தொடர்ந்து துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் 50 கோடி தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.
66 கோடி கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்பதிவு செய்துள்ளது. அதுதவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 22 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும் என வி.கே.போல் கூறினார்.
மூன்றாவது அலை ஏற்படாத வகையில் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு பணித்துள்ளார் எனவும் அவா் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை மக்களிடையே முகக்கவச பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. பல்வேறு தளர்வுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் முகக்கவசம் அணிவதை நம் வாழ்வின் புதிய இயல்பாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்திய மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா