அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு போலியான முகவரிக்கு பொதி சேவை ஊடாக அனுப்பப்பட்டிருந்த போது சுமார் 04 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
கடித உறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிகளவான போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அந்தத் தொகை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் சீதுவ பகுதியிலுள்ள கூரியர் நிறுவனத்தில் தினசரி பணியில் ஈடுபடும் சுங்க மதிப்பீட்டாளர்களால் போதைப் பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 05 கடித பொதிகளை ஆய்வு செய்ததில் குஷ் எனப்படும் கஞ்சா 3,900 கிராம் மீட்கப்பட்டுள்ளதுடன், கடித உறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா விதைகளும் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பிலியந்தலை, இங்கிரிய, மினுவங்கொட, மாத்தறை மற்றும் பொல்கஹவிட ஆகிய பகுதி போலி முகவரிகளுக்கே அவை அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளபோதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 04 கோடி இலங்கை ரூபாய் பெறுமதி கொண்டது.. கடித பொதிகள் அனுப்பப்பட்ட முகவரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சுங்க போதைப்பொருள் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக பொவிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு இந்த பொதிகளை ஒப்படைத்துள்ளனர்.