இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தொலைபேசி இலக்கங்கள் இஸ்ரேலின் என்.ஸ்.ஓ. உளவு நிறுவனத்தின் மென்பொருட்களைப் பயன்படுத்தி வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வேவு பார்க்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50 ஆயிரம் எண்களில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவர்களுடயவை என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவன பெகாஸஸ் (Pegasus) மென்பொருள் மூலம் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வொஷிங்டன் போஸ்ட், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வின் பிரகாரம் இவ்வாறான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், 40-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் இவற்றில் அடக்கியுள்ளன. சமூக ஆர்வலர்கள் எண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்டனவா? என்பதை உறுதி படுத்த ஆய்வு தொடர்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தொலைபேசிகளை வேவு பார்ப்பதற்கான மென்பொருள் சட்ட விரோத செயல்களை தடுக்கும் நோக்கிலேயே விற்பனை செய்யப்பட்டதாக இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.