ஈராக் - தலைநகர் பாக்தாத்தின் சதர் நகரப் பகுதியில் உள்ள சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதலில் காயமடைந்த பலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் நேற்று அதிக அளவில் சந்தையில் கூடியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது போராளி ஒருவர் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அங்கியுடன் கூட்டத்துக்குள் நுழைந்து குண்டை வெடிக்கச் செய்ததாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை அடுத்து சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை அவசரமாக அழைத்த ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, நிலைமை குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்ததாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பக்ரீத் பண்டிக்கைக்காக சதர் நகரில் கூடியிருந்த அப்பாவி மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அழிக்கப்படுவர். இத்தகைய பயங்கரவாதிகளை வேரோடு அழிக்கும் வரை எங்களுக்கு ஓய்வில்லை” என ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.