ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 மில்லியன் என்ற மோசமாக மைல் கல்லைக் கடத்து அதிகரித்துள்ளது.
இதன்மூலம் 50 மில்லியனுக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட உலகின் முதல் பிராந்தியமாக ஐரோப்பா பதிவானது.
ஐரோப்பிய நாடுகளில் ஆபத்தான டெல்டா திரிபு வைரஸ் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் பல நாடுகளில் தொற்று நோயாளர் தொகை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு 8 நாட்களுக்கும் புதிதாக 10 மில்லியன் கொவிட் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 1.3 மில்லியனாக பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் பதிவான ஒட்டுமொத்த தொற்று நோயாளர்களில் 27 வீதமானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், உலகளவில் மொத்த கொரோனா மரணங்களில் 31 வீதமானவை ஐரோப்பிய நாடுகளில் பதிவாகியுள்ளன.
ஐரோப்பாவில் 194 நாட்களில் தொற்று நோயாளர் தொகை 25 மில்லியனிலிருந்து 50 மில்லியனைக் கடத்துள்ளது. அதேவேளை, முதல் 25 மில்லியன் தொற்று நோயாளர்கள் 350 நாட்களில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பங்குச் சந்தையிலும் நேற்று கணிசமாக சரிவு ஏற்பட்டது. மீண்டும் மாதக்கணக்கிலான சமூக முடக்கல் அமுல் செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலிடத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)