கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத் தீ தீவிரமடைந்துவரும் நிலையில் அங்கு அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.
மாகாணத்தில் காட்டுத் தீ காரணமாக பெருமளவு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அடுத்துவரும் நாட்களில் காட்டுத் தீ மேலும் மோசமடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை வரையான நிலவரப்படி மாகாணத்தில் 299 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்நிலையில் தீயணைப்புப் பணிகளில் மாகாணம் முழுவதும் 3,180 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரி்ட்டிஷ் கொலம்பியா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மைக் பார்ன்வொர்த் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் காட்டுத் தீ மேலும் தீவிரமடையக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் பெருமளவானோரை அவர்களின் இடங்களில் இருந்து வெளியேற்றவேண்டி ஏற்படலாம் எனவும் மைக் பார்ன்வொர்த் செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
நாங்கள் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இதன் காரணமாகவே பாதுகாப்பு கருதியும் அவசர நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாகவும் அவசர கால நிலையை பிரகடணம் செய்வதாகவும் பிரி்ட்டிஷ் கொலம்பியா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மைக் பார்ன்வொர்த் கூறினார்.
நேற்று அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை குறைந்தது 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும். தேவைப்பட்டால் இது மேலும் நீடிக்கப்படும் என பிரி்ட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆபத்தான பகுதிகளில் இருந்து 5,724 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 69 இடங்களில் மக்களை வெளியேற்றுவதற்குத் தேவையான எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புக் கிடைத்ததும் தங்களது இடங்களில் இருந்து அடுத்த நொடியே வெளியேறத் தயாராக இருக்குமாறு இந்தப் பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சுமார் 32,000 -க்கும் மேற்பட்டோர் எந்நேரமும் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர்.
பிரி்ட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதம் கனடாவில் இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதளவுக்கு வெப்ப நிலை அதிகரித்தது.
இந்நிலையில் மிகவும் வரண்ட சூழ்நிலையில் ஏற்பட்ட மின்னல் தாக்கங்களால் பல இடங்களில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சாதனை மட்டத்துக்கு வெப்ப நிலை அதிகரித்த நிலையில் பிரி்ட்டிஷ் கொலம்பியா - லிட்டன் நகரம் காட்டுத் தீயால் கிட்டத்தட்ட முழுமையாக தீக்கிரையானது. இங்கு இருவர் உயிரிழந்தனர்.
இதேவேளை பிரி்ட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தீவிர வெப்ப அலை காரணமாக நூற்றுக்காணக்கான திடீர் மரணங்கள் பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கனடா, பிரிட்டிசு கொலம்பியா