சீனாவில் பல இடங்களில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மத்திய சீனாவின் பல பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.
ஹெனான் மாகாணத்தில் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கால் ஜெங்ஜோ நகரில் குறைந்தது 12 பேர் இறந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரதான வீதிகளை மேவி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. அத்துடன், பல விமான சேவைகளும் தடைப்பட்டுள்ளதால் டசின் கணக்கான நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 94 மில்லியன் மக்கள் வசிக்கும் ஹெனன் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருவதால் உயர்ந்தபட்ச அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லுயோங் நகரில் உள்ள அணையில் நீர்மட்டம் அதன் கொள்ளளவை மீறி 65 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அனர்த்தம் ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிக்க இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்கள் நீரில் மிதப்பதால் மீட்புப் படையினர் கயிற்றைப் பயன்படுத்தி மக்களை பாதுகாப்பிற்கு இழுத்துச் செல்வதைக் காண முடிகிறது.
ஜெங்ஜோவில் கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையின் அளவு பொதுவாக ஒரு ஆண்டு மழைவீழ்ச்சிக்குச் சமமானதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய சீனாவில் பெரும் பகுதிகளில் மழை நீடிக்கும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.