டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் சம்பந்தப்பட்ட 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் இரத்துச் செய்யப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஒலிம்பிக் விளையாட்டை இரத்து செய்யும் திட்டம் மொத்தமாக நிராகரிப்படவில்லை என்று டோக்யோ ஒலிம்பிக் 2020 ஒருங்கிணைப்பு குழு தலைவர் டொஷிரோ தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நிலவரம் கண்காணிக்கப்பட்டு, தேவைப்பட்டால் போட்டிகளை இரத்துச் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் அவா் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த விளையாட்டுகளில் சம்பந்தப்பட்ட 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அத்துடன், டோக்யோ உட்பட ஜப்பான் முழுவதும் தொற்று நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே நிலைமையைக் கருத்தில் கொண்டு போட்டிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என டொஷிரோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, “ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் இரத்து செய்யப்படாது” என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பேச் குறிப்பிட்டுள்ளார்.
பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.