அமெரிக்காவில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட முடியும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்து விஞ்ஞானிகள் இப்போது தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்த பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் மிக விரைவில் சிறுவா்களுக்கான தடுப்பூசிகள் கிடைக்கும். அவை கிடைத்ததும் தடுப்பூசிகள் பணிகள் கூடிய விரைவாக முன்னெடுக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த மே மாதம் அங்கீகாரம் வழங்கியது. எனினும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் எவையும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் பைசர் / பயோஎன்டெக் நிறுவனர் சிறுவர்களுக்கான தடுப்பூசி தரவுகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது. மொடர்னாவும் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான தனது இரண்டு அளவுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன், ஜோன்சன் &ஜோன்சன் நிறுவனமும் சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதலைப் பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு பெரும்பாலும் செப்ரெம்பர் தொடக்கம் முதல் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா