மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழையால் சுமார் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை வரையான தரவுகளின் பிரகாரம் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் 376,000 பிரதேச வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண அவசரகால முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மழை- வெள்ளத்தால் 215,200 ஹெக்டேர் பயிர்கள் சேதமாகியுள்ளன. இதனால் சுமார் 1.22 பில்லியன் யுவான் (சுமார் 188.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவின் ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள நகர ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ரயில் பெட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு பல பயணிகள் உயிர் தப்பினர்.
ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் பெரும் உயிர்ச் சேதங்கள் நேரலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. எனினும் பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் ரயில் பெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.
மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள நகரமான ஜங்ஜோ வெள்ள ஆபத்து அதிகம் உள்ள மஞ்சள் நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 1.2 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
ஹெனான் மாகாணத்தில் சமீபத்திய மழை காரணமாக இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் கனமழையால் இங்கு வெள்ளம் உண்டாகும். இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று சீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.