பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி ஜனாதிபதிக்குக் கடிதங்களை அனுப்பிவைக்கும் பிரச்சாரப் போராட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா இலுபையடிச் சந்தியில் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் மதியம் வரை இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது 500 -க்கு கடிதங்களில் கையொப்பங்கள் பெறப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதற்கு சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரட்ணம் குழுவொன்றை நேற்று நியமித்துள்ளார்.
இதேவேளை, சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி ஷெஹாப்தீன் ஆயிஷா, மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன், மற்றும் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.