ஒருவர் உயிரிழந்து மூவர் படுகாயமடைந்த கார் விபத்துச் சம்பவம் தொடர்பில் பிக் பொஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவு வேளை தமிழ்நாடு, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியின் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்காகியிருந்தது.
சம்பவத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிச்செட்டி பவானி (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாஷிகா ஆனந்த் மற்றும் இரண்டு நண்பர்கள் உட்பட்ட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.