சீனாவில் கடந்த ஜனவரி மாதத்துக்குப் பின்னர் அதிகளவான கொரோனா தொற்று நோயாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டனர்.
சீனாவின் கிழக்கு நகரமான நாஞ்சிங்கில் ஒரு புதிய கொத்தணித் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நகரில் அனைவருக்கும் கொவிட் 19 பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று உறுதி செய்யப்பட்ட தொற்று நோயாளர்களின் 40 போ் வெளிநாடுகளுக்கான பயண வரலாறுகளைக் கொண்டிராதவர்கள் என்பதால் உள்ளூா் சமூகத் தொற்று அச்சம் அதிகரித்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிக தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நாஞ்சிங் நகரில் உள்ள 9.3 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கும் கொவிட் பரிசோதனைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக சீன அரச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய தொற்று நோயாளர்களுடன் தொற்று நோயின் ஆரம்பம் முதல் சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 92,605 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சீனாவில் மொத்தம் 4,636 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா