முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த கிசாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றபெண்கள் ஒன்றியம் மற்றும், சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்ட காரர்கள்.....
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.அந்தவகையில் கொழும்பில் மரணமடைந்த கிசாளினி என்ற சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.
அவளது மரணத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரிநிற்கின்றோம். தற்போது சிறுமிகள் பெண்கள் மீதான, துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது கேள்விக்குறியாகவுள்ளது.
எனவே கிசாளியின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். எமது நாட்டின் பெண்கள் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும். என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன்,பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா