துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கயீஸ், நாடாளுமன்றத்தையும் முடக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து பிரதமருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் துனிசியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனினும் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வராததால் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி கட்டுப்பாடுகளை தளர்த்த மறுத்து வந்தார்.
இந்நிலையில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி துனிசியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க வலியுறுத்தி இளைஞர்களும் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தலைநகர் துனிசில் வெடித்த போராட்டங்கள் நபியூல், சவுசி, கெய்ரோவான், டியூசியோர் உள்ளிட்ட இடங்களுக்கும் பரவியது. பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சியின் அலுவலகங்கள் இளைஞர்களால் சூறையாடப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி கயீஸ் சயீத் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய ஜனாதிபதி கயீஸ், பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியை பதவிநீக்கம் செய்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளதாகவும் அறிவித்தார்.
தேசிய அளவிலான பதற்றத்தின் எதிரொலியாக நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. இதனால் நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளோம் என கயீஸ் தெரிவித்தார். அத்துடன், பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.
புதிய பிரதமரை தேர்வு செய்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி கயீஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி கயீசின் அறிவிப்பை அடுத்து நாடெங்கும் வீதிகளில் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். புதிதாக நியமிக்கப்படவுள்ள பிரதமர் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.