முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த மலையகச் சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
"ஹிஷாலினியின் மரண பரிசோதனை தொடர்பில் எமக்குச் சந்தேகம் நிலவுகின்றது. எனவே, மீள்பரிசோதனை நடத்தப்பட வேண்டும்" என்று அந்த முறைப்பாட்டில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கான சூழுல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
"மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் எனது மகளை இருட்டறைக்குள் வைத்து கொடூமைப்படுத்தியுள்ளனர். மரண பரிசோதனை நடத்திய வைத்தியர் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மீள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனக் கோரினோம்" என்று ஹிஷாலினியின் பெற்றோர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.