கடந்த இரு வாரங்களில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், தொற்று நிலை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் இந்த நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது நாளாந்தம் சுமார் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாளொன்றிற்கு ஒரு தொற்றாளர் மட்டும் அடையாளம் காணப்பட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நுரையீரல் நோய், சுவாச நோய், பிறவியிலேயே காணப்படும் இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றினால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் கொவிட் தொற்று தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுவதால், அவர்கள் கொவிட் தொற்றால் மரணிப்பதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சமீபத்தில் உயிரிழந்த பத்து சிறுவர்களும் இவ்வாறான நோய்களை கொண்டிருந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு 'மல்டிபிள் ஸ்களீரோசிஸ்' என்ற நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், சிறுவர்கள் இரண்டு வாரங்களுக்குள் தோல் சிவத்தல், வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை