இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்று அபாயம் நீடித்து வரும் நிலையில் நேற்றைய தினமும் 1,665 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, நேற்றைய தினம் புதுவருட கொத்தணியில் 1,653 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் மேலும் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 10,145 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும், 3,454 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே இவ்வாறு 1,665 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 298,181 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது எண்ணிக்கை 269,007 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மேலும் 48 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 4,147 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை