இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான ரீ-20 தொடரில் பங்கேற்றுள்ள க்ருணல் பாண்ட்யாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்து இந்திய வீரர்கள் எண்மர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேற்று நடைபெற்றிருக்க வேண்டிய இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ரீ-20 போட்டி இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இன்றும் போட்டி நடைபெறுமா என்பது தெரியவரும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள தெரிவித்தன.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரீ-20 போட்டியில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றுள்ள நிலையில் இலங்கை அணி வீரர்கள் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் மேலும் வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுமாயின் இன்றைய போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி குழாமில் சிலருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் சில நாட்கள் பிற்போடப்பட்டு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை