இந்தியா - உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் 18 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
ஹரியானாவில் பணிபுரிந்த பீஹாரை சேர்ந்த இந்த தொழிலாளர்கள் பேருந்து மூலம் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் அவர்கள் பயணித்த பேருந்து பழுதடைந்து நின்றது. இதனையடுத்து, பேருந்தை வீதி ஓரமாக நிறுத்தி அதில் பயணித்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வேகமாக வந்த ட்ரக் ஒன்று இந்தப் பேருந்துடன் அசுர வேகத்தில் மோதியது. இதன்போதே இந்த துயரம் இடம்பெற்றது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விபத்தில் சிக்கிய பேருந்தில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 65 பேர் பயணிக்கக்கூடிய பேருந்தில் 140 பேர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். இதுவே பேருந்து பழுதடைந்து வீதியில் நிற்கக் காரணமாக அமைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 2 இலட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.