இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது உயிர்க்குமிழி நடைமுறைகைளை மீறிய நடமாடியதால் தொடரில் இருந்து இடைநிறுத்தப்பட்டு திருப்பி அழைக்கப்பட்டிருந்த குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அத்துடன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கும் 6 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி மூவருக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் பரிந்துரை செய்யப்படும் வைத்தியர் ஒருவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெறுமாறும் குறித்த மூவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக அவர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களை கடந்த தினத்தில் அவர்கள் மூவரும் கடிதங்கள் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஒழுக்காற்று குழுவிற்கு அறியப்படுத்தி இருந்தனர்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு அமைய குறித்த மூன்று பேரும் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவர்கள் தொடர்பில் குறித்த தீர்ப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 5 பேர் அடங்கிய ஒழுக்காற்றுக் குழு அறிவித்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை