இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்தில் பெற்றுவரும் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர்.
மாநிலத்தின் மெதினாபூர், ஹூக்ளி, ஹவுரா உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்து சுமார் 250,000 மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹவுரா மாவட்ட பகுதிகளை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உடன் வெள்ள பாதிப்புகள் குறித்து மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதேவேளை, ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கோட்டா மாவட்டத்தின் இதாவா பகுதியில், 40 பேருடன் சென்ற பேருந்து வெள்ளநீரில் சிக்கிக்கொண்டது. பின்னர் விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் போராடி அனைவரையும் மீட்டனர்.
மத்திய பிரதேச மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 240 கிராமங்களில் சுமார் 6,000 பேர் வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் பேசியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், நஹன் - குமார்ஹத்தி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடுமையான போராட்டத்தின் பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.