ஒலிப்பிக் ஹொக்கிப் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி இன்று பதக்கம் வென்றுள்ளது.
1980 மொஸ்கோ ஒலிம்பிக்கில் வெறும் 6 அணிகள் விளையாடிய போட்டியில் இந்திய ஹொக்கி அணி தங்கம் வென்றது. அதன்பின் இம்முறையே இந்தியா ஹொக்கிக் போட்டியில் பதக்கத்தை வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹொக்கி அணி ஜேர்மனி அணியுடன் மோதியது. போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜேர்மனி முதல் கோலை அடித்து முன்னிலைக்குச் சென்றது. எனினும் இரண்டாவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் 17-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. நீலகண்ட சர்மா அளித்த பந்தை சிம்ரஞ்சித் கோலாக்கினார்.
இதனையடுத்து ஜேர்மனி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினார். இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் அடுத்தடுத்து ஜேர்மனி இரண்டு கோல்களை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது. இதே போல் இந்திய அணியும் இரண்டு கோல்களை அடித்தது. இதனால் இரு அணிகளும் 3-3 என்ற கோல்கணக்கில் மீண்டும் சமநிலை பெற்றன.
மூன்றாவது கால் பகுதி ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணி பெனால்ட்டி மூலம் இன்னொரு கோலை அடித்தது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்சித் சிங் மற்றொரு கோலை அடித்தார். இதனால் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
பரபரப்பான கடைசி கால் பகுதி ஆட்டத்தில் ஜேர்மனி வீரர்களால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்தியா ஹொக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுவொரு வரலாற்று தருணம். இது ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கல பதக்கத்தை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த எங்கள் ஆண்கள் ஹொக்கி அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.