கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது ஆட்சியைக் கலைத்து விரைவில் ஒரு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இது குறித்த அறிவிப்பை பிரதமர் ட்ரூடோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட் 19 தொற்று நோயைக் சமாளிக்க ஏதுவாக பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தோ்தலைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக ஆளும் லிபரல் கட்சி உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பிரதமர் ட்ரூடோ தலைமையிலான சிறுபான்மை லிபரல் அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு வருடங்கள் உள்ளன. இந்நிலையில் அதற்கு முன்னதாக பெரும் பாலும் இவ்வாண்டு இறுதிக்குள் தோ்தலைச் சந்திக்கும் முடிவில் பிரதமர் ட்ரூடோ உள்ளதாகத் தெரியவருகிறது.
பொதுமன்றத்தில் பிரதமர் ட்ரூடோ அரசாங்கம் சிறுபான்மை ஆதரவையே கொண்டுள்ளதால் முக்கிய சட்ட மூலங்களை நிறைவேற்றுவதில் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அனைத்துக்கும் ட்ரூடோ அரசு எதிர்க்கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று நோய் நெருக்கடியால் வருவாய் இழந்த கனேடியர்கள் மற்றும் கனேடிய வணிகங்களின் மீட்சிக்காக அதிகளவு நிதியை கனேடிய அரசு செலவிட்டதால் செலவீனங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடியில் இருந்து மீளவும் பெரும்பான்மை அவசியம் என ட்ரூடோ கருதுவதாகத் தெரிகிறது.
கடந்த 2005- ஆம் ஆண்டு கனேடிய பொதுமன்றத்தில் 338 இடங்களில் பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களை வென்று ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசு ஆட்சியமைத்தது.
எனினும் 2019-ஆம் ஆண்டு சிறுபான்மை மக்களை இழிவு படுத்துவது போன்று வேடமிட்ட ட்ரூடோவின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் அவரது செல்வாக்கு சரிந்தது. கடந்த தோ்தலில் அவரது கட்சியால் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. 155 இடங்களையே லிபரல் அரசு கைப்பற்றி சிறுபான்மை அரசமைத்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் தோ்தலைச் சந்தித்து பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள பிரதமர் ட்ரூடோ திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் கொவிட் 19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் விரைவில் தோ்தலுக்குச் செல்வது தேவையற்றது மற்றும் ஆபத்தானது என கனேடிய எதிர்க்கட்சிகள் கருத்து வெளியிட்டுள்ளன.
பிரதமர் ட்ரூடோ பெரும்பான்மையைப் பெறும் நோக்குடன், சுயநலத்தின் அடிப்படையிலேயே விரைவில் தோ்தலை நடத்த திட்டமிட்டு வருவதாக புதிய ஜனாநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
ட்ரூடோவின் முக்கிய போட்டியாளராக இருக்கும் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்கள், லிபரல் அரசின் செலவுகள் அதிகமாக இருப்பதாகவும், எதிர்கால சந்ததியினரை கடனில் சிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை அபாகஸ் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் கனேடியர்கள் மத்தியில் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 37% ஆதரவையும் கன்சர்வேடிவ்கள் 28% ஆதரவையும் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 6 முதல் 11-ஆம் திகதி வரை இணைய வழியூடாக நாடு முழுவதும் 3,000 பேரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு தோ்தலை மீண்டும் நடத்தினால் ட்ரூடோ தலைமையிலான லிபரல் பெரும்பான்மை பெற முடியும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.