இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காது பெற்ற 127 ஓட்டங்கள் உதவியுடன் இந்திய அணி வலுவான ஆரம்பத்தை பெற்றுள்ளது.
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லோட்ஸில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
ரோகித் சர்மாவும் கே.எல். ராகுலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆரம்ப இணைப்பாட்டமாக 126 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 83 ஓட்டங்களை பெற்றிருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த புஜாரா - 9, விராட் கோலி - 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆட்டத்தின் முதல் நாள் நிறைவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களை பெற்றிருந்தது இந்திய அணி.
கே.எல். ராகுல் 127 ஓட்டங்களுடனும் ரஹாணே ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.
பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுக்களையும், ஒல்லி ரொபின்சன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.
ஆட்டத்தின் 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி-தோல்வி இன்றி சமநிலையில் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா