குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு 3-ஆவது கொவிட் 19 தடுப்பூசி போட அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அங்கீகாரமளித்துள்ளது.
பைசர் -பயோஎன்டெக் மற்றும் மொடர்னா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி 3-ஆவது தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது வேறு காரணங்களால் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசி போட வழி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான அனுமதியில் கையெழுத்திட்டார். இதனையடுத்து 3-ஆவது தடுப்பூசி போடும் திட்டம் உடனடியாக அமுலுக்கு வந்தது.
அமெரிக்காவில் டெல்டா திரிவு பரவலால் தீவிரமாகியுள்ளதால் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி 100,000 வரையானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.
இந்நிலையிலேயே அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு 3-ஆவது தடுப்பூசி போட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 3-ஆவது தடுப்பூசி தேவையான மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்ற வயைறைக்கு அமெரிக்க மக்கள் தொகையில் 3 வீதத்துக்கும் குறைவானவர்களாக உள்ளதாக உணவு மற்றும் மருத்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ரோசெல் வாலென்ஸ்கி கூறினார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஆரோக்கியமான நபர்களுக்கு இப்போது கூடுதல் தடுப்பூசி தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா