ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்று ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக இது அமைந்துள்ளதாகவும் அவா் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய பின்னர் வேகமாக முன்னேறி வந்த தலிபான்கள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.
அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்ட நிலையில் அங்கு தலிபான்கள் தலைமையில் புதிய அரசாங்கம் அமையவுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு அமெரிக்க படைகளை அவசரமாக திரும்ப பெறும் ஜனாதிபதி ஜோ பைடனின் தவறான முடிவே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலக வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இப்படி நடக்க அனுமதித்ததற்கு ஜோ பைடன் அவமானத்துடன் ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் இது. எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக இது வரலாற்றில் இடம்பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நான் ஜனாதிபதியாக இருந்தால் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது மிகவும் வித்தியாசமானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருந்திருக்கும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவு கடந்த ட்ரம்ப் ஆட்சிக்காலத்திலேயே எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.