நியூசிலாந்தில் ஒரேயொரு கொரோனா தொற்று நோயாளி உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் 3 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் ஒரு தொற்று நோயாளி சமூகத்தின் இருந்து கண்டறியப்பட்டுள்ளார். நாட்டில் கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளி இவராவார்.இந்நிலையில் தொற்று நோயாளரின் தொடர்புகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்த அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே இன்று வெலிங்டனில் நடந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், 3 நாட்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்படும் என அறிவித்தார். இன்று நள்ளிரவு முதல் முடக்கம் அமுலுக்கு வரும் எனவும் அவா் கூறினார்.
இதேவேளை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளி எந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் இது ஆபத்தான டெல்டா திரிபாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாக அவா் குறிப்பிட்டார்.
வேகமாகப் பரவும் டெல்டா திரிபு ஆபத்தானது. இதிலிருந்து நாங்கள் விரைவாக மீண்டு வர சில கஸ்டங்களை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு தொற்று நோயாளர்கள் கண்டறிப்பட்ட நிலையில் நாட்டை முடக்கி மிகச் சிறப்பாக கையாண்டு நியூசிலாந்து வெற்றிகண்டது. இந்நிலையில் ஒரு வருடத்தின் பின்னர் நாடு இப்போதுதான் மீண்டும் 3 நாட்கள் முடக்கப்படுகிறது.
முடக்க நிலை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டில் அனைத்து பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்டறியப்பட்ட தொற்று நோயாளி 50 வயதானவர் எனவும். அவர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் எனவும் நியுசிலாந்து சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), நியூசிலாந்து