இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 8 மாதங்களில் பின்னர் அனைத்து அமெரிக்கர்களுக்கும் 3 ஆவது தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை இவ்வார இறுதியில் பைடன் நிர்வாகம் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ஜோன்சன் & ஜோன்சன் ஒற்றைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான அடுத்த தடுப்பூசி குறித்து சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பின்னரே முடிவு செய்யப்படவுள்ளது.
வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து போடுவதன் மூலம் ஏற்படும் நோயெதிர்ப்பு செயல் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, முதலில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு மூன்றாவதாக அதே வகை தடுப்பூசியை வழங்குவதே சாத்தியம் என சுகாதார தரப்பினர் பரிந்துரைத்துள்ளனர். ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வேறொரு பூஸ்டர் தடுப்பூசி தேவை என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்படக் கூடிய தரப்பினருக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்குமாறு ஏற்கனவே சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
எனினும் பூஸ்டர் எனப்படும் மூன்றவது தடுப்பூசித் திட்டத்தை குறைந்தது செப்டம்பர் வரையாவது ஒத்திவைக்குமாறு உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
ஏழைநாடுகளில் பெரும்பாலானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியைக் கூட இதுவரை பெறவில்லை. இந்நிலையில் செல்வந்த நாடுகள் மூன்றாவது தடுப்பூசி போடத் திட்டமிடுவது நியாயம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்ஆதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.