சீனாவில் தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதை அனுமதிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் குறைந்துவரும் சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் கடந்த மே 11-ஆம் தி வெளியிடப்பட்டது. இதில், கடந்த 1950-க்குப் பின்னர்மிகப்பெரிய சரிவை சந்தித்திருப்பது கண்டறியப்பட்டது.
சீனாவின் மொத்த மக்கள் தொகை 141.2 கோடியாகும். கடந்த 1976 முதல் 2016 வரை மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தை திட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது.
இதனால் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்ததால் 2016-இல் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
எனினும் சீனர்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக இளம் வயதினர் குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பில் பல்வேறு எதிர்கால பிரச்னைகளை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என சீனா உணர்ந்தது.
இதைத் தொடர்ந்து, 2 குழந்தைகளுக்குப் பதிலாக 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு கடந்த மே மாதம் அறிவித்தது.
இப்புதிய திட்டத்தை சட்டரீதியாக அனுமதிக்கும் வகையில் மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தம் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு மூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.