அவுஸ்திரேலியா - மெல்போர்ன் நகரல் சமூக முடக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இன்று பெரும் மோதல் வெடித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும் கூய்ச்சல் இட்டுக் கத்துவதையும் கைகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதையும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் காண முடிந்தது.
இதேவேளை, ஆா்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மிளகு தெளிப்பான்களை அவர்கள் மீது பொலிஸார் வீசிறியடித்தனர்.
மெல்போர்ன் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படும் என விக்டோரியாவின் முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் வெடித்தது.
இதேவேளை, விக்டோரியா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை 77 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
அங்கு தொற்று நோயாளர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே மீண்டும் முடக்க நிலை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முடக்க உத்தரவை எதிர்த்துக் களமிறங்கியுள்ள போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த மெல்போர்னில் 700 பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் திரண்டுள்ளவர்கள் எங்களை முடக்காதே. எங்களை சுதந்திரமாக நடமாட விடு எனக் கூச்சலிட்டனர். எனினும் இவா்களை சுயநலவாதிகள் என பொலிஸார் விமர்சித்தனர்.
இதேவேளை, சிட்னியிலும் ஆா்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து அங்கு 1,500-க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா