அமெரிக்கா-டென்னசி மாகாணத்தின் மத்திய பகுதிகளில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 50 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இடிந்து விழுந்துள்ள கட்டங்களுக்குள் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் சிலரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக டென்னசி - ஹம்ப்ரிஸ் கவுண்டி பொது தகவல் அதிகாரி கிரே கோலியர் தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கால் வீதிகள் மோசமாகச் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால் தொடர்பாடல் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை பெற முடியாத நிலையில் பல குடும்பங்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.
அவசரகால மீட்புப் பணியாளர்கள் வீடு வீடாக காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என ஹம்ப்ரிஸ் கவுண்டி சுகாதார - பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பிரவுன் கூறினார்.
காணாமல் போயுள்ள பலர் நீா்வரத்து அதிகம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கின்றனர். இதனால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று டென்னசி கவர்னர் பில் லீ நிலைமைகளை ஆய்வு செய்தார். வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டபோதும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. காணாமல் போயுள்ளவர்களை கண்டறிந்து மீட்பதே எங்களது முன்னுரிமை என நிலைமைகளை ஆய்வு செய்த பின்னர் அவர் தெரிவித்தார்.