நியூசிலாந்தில் அண்மைய நாட்களில் 100 வரையான கொவிட் 19 தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டில் அமுலில் உள்ள சமூக முடக்க நிலை நீடிக்கப்படுவதாக பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
நாடு தழுவிய முடக்க நிலை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொற்று மையமான ஒக்லாந்தில் ஆகஸ்ட் 31 வரை கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் எனவும் நியூசிலாந்து பிரதமர் தெரிவித்தார்.
டெல்டா உரு திரிவு கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலையை பாடமாகக் கொண்டு எச்சரிக்கையாக இதனைக் கையாள வேண்டும் என இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் நேற்று மேலும் 35 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இவற்றுடன் கடந்த சில நாட்களில் 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று ஒக்லாந்தில் 33 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட அதேவேளை, தலைநகர் வெலிங்டனிலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து