மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் பவாத் ஆலம் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்ட சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் அணி 302 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முன்னணி வீரர்கள் மூவரும் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேற 2 ஓட்டத்தை பெறுவதற்குள் 3விக்கெட்டை இழந்து தடுமாறியது பாகிஸ்தான்.
இக்கட்டான நிலையில் களமிறங்கிய அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் பவாத் ஆலம் ஆகியோர் நிலமையை உணர்ந்து சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கினர்.
இணைப்பாட்டமாக 158 ஓட்டங்களை பெற்ற நிலையில் பாபர் அசாம் 75 ஓட்டங்களுடன் ஆட்மிழந்திருந்தார்.
இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 74 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களை பெற்றிருந்தது பாகிஸ்தான் அணி.
போட்டியின் 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டிருந்தது.
3வது நாள் ஆட்டத்தின் போது அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்கள் எவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் 9 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது.
காயத்திற்குள்ளான நிலையிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பவாத் ஆலம் இறுதி வரை ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்துவீச்சில் கெமர் ரோச், சீலஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹோல்டர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இதையடுத்து முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
3ஆம் நாள் ஆட்ட நிறைவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்