கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்தினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறும் வகையில் சில பகுதிகளில் மக்கள் செயற்படுவதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பும் அதனால் ஏற்படும் இறப்பு வீதம் அதிகரித்துவரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மக்கள் இறுக்கமாக பின்பற்றுமாக சுகாதார பிரிவினரால் தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு நகர் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மக்கள் அதிகளவில் நடமாடி திரிவதை காணமுடிகின்றது.
சிலர் முக்கவசம் இன்றியும் நடமாடித்திரிவதை காணமுடிகின்றது. பொலிஸாரும் இராணுவத்தினரும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதிலும் அதனை மீறிய வகையில் மக்கள் செயற்படுவதை காணமுடிகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதன் காரணமாக இந்த செயற்பாடு அவர்களின் குடும்பத்தினதும் உறவினர்களினதும் குடும்பத்தினரது உயிரிழப்புக்கும் தொற்றுக்கும் காரணமாக அமையும் நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மக்கள் வீட்டில் இருப்பதன் மூலமே இந்த கொரோனா தொற்றினைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு