ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா இன்று முழுமையாக வெளியேறியுள்ள நிலையில் இதனை, வான வேடிக்கையுடனும் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீா்த்தும் தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர்.
20 வருட கால ஆக்கிரமிப்புக்குப் பின்னர் அமெரிக்கா வெளியேற்றப்பட்டதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு "முழு சுதந்திரம்" கிடைத்துள்ளதாக தலிபான்கள் அறிவித்தனர்.
அமெரிக்கா முழுமையாக வெளியேறியதன் மூலம் எங்கள் நாடு முழுமையாக சுதந்திரம் பெற்றுள்ளது என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இன்று செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தார்.
கடைசி அமெரிக்க விமானம் இன்று அதிகாலை வானில் எழுந்து மறைந்து சென்றதை அடுத்து தலிபான் போராளிகள் வானத்தை நோக்கி துப்பாகிகளால் சுட்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வான வேடிக்கைகளையும் அவா்கள் நிகழ்த்தினர்.