சீனாவில் சிறுவர்கள் கணினி மற்றும் கைத்தொலைபேசிகளில் ஒன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட வாரத்தில் 3 மணி நேரங்கள் மட்டுமே அனுமதி வழங்கி சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களிலும் மட்டும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை ஒன்லைன் விளையாட்டுகளை விளையாட சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏனைய நேரங்களில் இதற்கு தடை விதிக்கப்படும் என சீனாவின் ஒன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை செப்டம்பர் -01 முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முந்தைய கட்டுப்பாட்டின்படி, சிறுவர்கள் தினமும் ஒன்றரை மணி நேரமும், விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் ஒன்லைன் விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சீன அரசின் தற்போதைய அதிரடி அறிவிப்பால் ஒன்லைன் விளையாட்டுகளில் கோலோச்சிவரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களின் பங்கு மதிப்பு உடனடியாகவே பெருமளவுக்குச் சரிந்தது.
ஒன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்படி கடைப்பிடிக்கின்றனவா? என்று தீவிரமாக கண்காணிக்கவும் போகிறோம் என்று சீன அரசு எச்சரித்துள்ளது.
சீனாவில் மட்டுமன்ற உலகம் முழுவதும் சிறுவர்கள் ஒன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி வருகிறனர். இதனால் சிறுவர்கள் கடுமையாக உடல், உள ரீதியான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இவ்வாறான நிலையிலேயே ஒன்லைன் விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.